மீண்டும் மீண்டுமா?மீண்டும் கைகோர்த்த சிவிஎஸ் - எஸ்பி வேலுமணி! மறுபடியும் உடையுது அதிமுக?நடப்பது என்ன?
Again CVS and SP Velumani have joined hands once more Is the AIADMK fracturing again What is happening
சென்னை: அதிமுகவில் உள்கட்சி குழப்பங்கள் தொடரும் நிலையில், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல் அக்கட்சியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தகவலின்படி, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றதாகவும், அதில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்களும் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
விராலிமலை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான சி.விஜயபாஸ்கர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. இந்த முடிவு, அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சில தலைவர்களுக்கு புதிய அரசியல் வாய்ப்புகள் குறித்து சிந்திக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அணியில் முக்கியப் பங்காற்றிய சி.வி.சண்முகத்தின் அடுத்தகட்ட அரசியல் முடிவு என்ன என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. எனினும், தற்போது அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து உடனடியாக இடைத்தேர்தலை சந்திக்கும் மனநிலையில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, சி.வி.சண்முகம் கட்சிக்குள் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பு, சி.வி.சண்முகம் தன்னை நேரில் சந்திக்காத நிலையில் அவருக்கு எந்தப் பொறுப்பும் வழங்க முடியாது என்ற மனநிலையில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர்மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில்தான் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் சந்தித்து தற்போதைய அரசியல் நிலை, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அடுத்தகட்ட நகர்வு, இடைத்தேர்தல் வாய்ப்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசித்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் ஊகிக்கின்றன.
ஏற்கனவே பல தொகுதிகள் காலியாகியுள்ள நிலையில், மேலும் சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதனால், தமிழகத்தில் விரைவில் பல தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி சந்திப்பு குறித்த தகவல், அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சாத்தியம் குறித்து புதிய அரசியல் விவாதங்களை கிளப்பியுள்ளது. எனினும், இந்தச் சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட தலைவர்கள் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Again CVS and SP Velumani have joined hands once more Is the AIADMK fracturing again What is happening