அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி வழக்கு.. மீண்டும் சிக்கலில் ஓபிஎஸ், இபிஎஸ்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
admk general body meeting ban case
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23-ம் தேதி வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினரான சூரிய மூர்த்தி என்பவர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் விதிகளுக்கு முரணாக அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையும் அல்லது கடிதத்தையும் தேர்தல் ஆணையம் கட்சிக்கு தரவில்லை. மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், உரிமையியல் நீதிமன்றத்துக்குத்தான் உரிமை உள்ளது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இதுநாள்வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த ஒரு உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை.
அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொது செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்றும் எந்த நீதிமன்றமும் தெரிவிக்க வில்லை. எனவே கட்சி விதிகளுக்குப் புறம்பாக வருகின்ற ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம், இது தொடர்பாக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், கேபி முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகின்ற ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
English Summary
admk general body meeting ban case