இனியும் இதுபோன்ற தவறான வழிக்கு எந்த மாணவ, மாணவியும் செல்லக்கூடாது... எடப்பாடி பழனிச்சாமி வேதனை!
admk eps neet
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சேகர் - புவனேஷ்வரி தம்பதியினரின் 2வது மகள் கோபிகா, நீட் தேர்வு அச்சத்தால் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக வந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
மாணவி கோபிகாவை இழந்து வாழும் அவரது பெற்றோர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
நீட் தேர்வு எதிர்ப்பு என்ற கொள்கை நிலைப்பாட்டில் அஇஅதிமுக தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. மாணவச் செல்வங்கள் நீட் தேர்வு அச்சத்தால் உயிரை விடத் திணிப்பது தவறு என்று பலமுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், என் சார்பிலும் வலியுறுத்தி வந்துள்ளோம்.
மாணவச் செல்வங்களே- தேர்வு என்பது மட்டுமல்ல, எந்த ஒரு விஷயமும் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியமானது அல்ல. மருத்துவர் படிப்பு மட்டுமல்லாது, மருத்துவத்துறை தொடர்பாக பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்கள் சாதனைகளைப் பார்த்து மகிழ உங்கள் பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்லுங்கள்!
இனியும் இதுபோன்ற தவறான வழிக்கு எந்த மாணவ, மாணவியும் செல்லக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.