சாதி ரீதியான கணக்கெடுப்பை திமுக திடீரென ஆதரிப்பதன் பின்னணி இதுதான் - எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு அண்மையில், விரிவான விதத்தில் சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் போன்ற தருணம். இந்தியாவின் சமூகநீதிக் கொள்கையின் வரையறைகளை சீரமைத்து மாற்றியமைப்பதற்கான வாக்குறுதி இது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் இதை நம்பிக்கையுடனும், பெருமையுடனும் நான் வரவேற்கிறேன்.

சாதி ரீதியான கணக்கெடுப்பு என்பது அதிமுக ஏற்கெனவே தெளிவுடனும், முன்னோக்கிய பார்வையுடனும் முன்வைத்த ஒரு வேண்டுகோள். இந்த தருணம், ஒரே இரவில் உருவான தருணமல்ல. சாதி ரீதியான கணக்கெடுப்புக்கான இந்த அழைப்பு இப்போது தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் இதன் வேர்கள், தமிழகத்தின் சமூகநீதி இயக்கத்தில் இருந்து, அதன் கொள்கை நிலத்தில் இருந்து வந்தது.

இந்த சமூகநீதி பயணம் என்பது எங்களது முன்னோக்கிய தொலைநோக்குப் பார்வை கொண்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்ட அஸ்திவாரம். நேர்மையான, சமமான பிரதிநிதித்துவத்துக்கு அடிக்கல் நாட்டியவர் அவர்தான். 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் முதல்வராக இருந்த நேரத்தில், சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்த சொன்ன முதல் அரசுகளில் எங்களது அரசும் ஒன்று. 1931-ம் ஆண்டு காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் காலாவதியான பழைய தரவுகள், தகவல்களை வைத்துக்கொண்டு நலத்திட்டங்கள் எதையும் நிறைவேற்ற முடியாது என்று ஆரம்ப முதலே நாங்கள் வாதாடி வருகிறோம்.

முன்னேற்றம் என்பது அனுதாபம் மூலம் வர முடியாது. ஆதாரங்கள் மூலம் மட்டுமே முன்னேற்றம் வரும். 69 சதவிகித இடஒதுக்கீடு கொள்கை மூலம் நீண்டகாலமாக கலங்கரை விளக்கம் போல உறுதியான செயல்பாட்டுடன் விளங்கிய கட்சி அதிமுக. அதிமுகவின் சாதனைகள் ஒரு விபத்து போல திடீரென ஏற்படுத்தப்பட்ட சாதனைகள் அல்ல. கட்சியின் அரசியல் உறுதிப்பாடு காரணமாகவும், சட்டரீதியான நிபுணத்துவத்தின் மூலமாகவும் அதிமுகவின் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

உச்சநீதிமன்றத்தில் இந்திரா சாஹனி (மண்டல்) வழக்கில் 1992-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. இடஒதுக்கீடுகளுக்கு இந்த தீர்ப்பு 50 சதவிகித வரம்பு விதித்தது. தமிழகத்தின் அடிப்படையான கொள்கை கட்டமைப்புக்கு இது அச்சுறுத்தலாக அமைந்தது. ஆனால் அந்த சவாலை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியுடன் எதிர்கொண்டார். 1993-ம் ஆண்டு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

டெல்லிக்கு அனைத்துக் கட்சி தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தார். அவரது இடைவிடாத, விடாப்பிடியான, தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணமாக தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு சட்டம், அரசியல் அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இடம்பெற்றது. நீதித்துறை வந்து மீளாய்வு செய்வதில் இருந்து சமூக நீதியை அது பாதுகாத்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அன்று செய்தது வெறும் அரசாட்சி அல்ல. அதன் பெயர் தலைமைத்துவம். சாதி ரீதியான கணக்கெடுப்பு குறித்து 2021-ம் ஆண்டு நாங்கள் வைத்த சாதி ரீதியான கணக்கெடுப்பு வேண்டுகோள், வெறும் அரசியல் அலங்காரத்துக்காக முன் வைத்த வேண்டுகோள் அல்ல.

தமிழகத்தின் சமுதாய யதார்த்தங்களை புரிந்து வைத்திருந்த எங்களது நீண்டகால புரிதலின் பிரதிபலிப்பு இது. பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, நலத்திட்டங்களில் உண்மையான சரியான பிரதிநிதித்துவம் வேண்டும். இதை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய அவரசத் தேவை இருப்பதை நாங்கள் உணர்கிறோம். ஏற்றுக்கொள்கிறோம். சாதி ரீதியான கணக்கெடுப்பு குறித்து ஆரம்பகட்டத்தில் நாங்கள் பேசிய காலத்தில், ஆளும் திமுக அமைதியாக, மவுனமாக இருந்தது. ஆனால் இப்போது அதே கட்சி, சாதி வாரி கணக்கெடுப்பில் தங்களை ஏதோ முன்னணி வழிகாட்டிகள், ஒளிகாட்டிகள் போல பேசிக் கொள்கிறார்கள்.

2023-ம் ஆண்டின் பிற்பகுதியில்தான் திமுக முதல்வர் இதுபற்றி பிரதமருக்குக் கடிதம் எழுதினார். நாங்கள் ஏற்கெனவே பேசி வந்த விஷயத்தைத்தான் அவர் எதிரொலித்தார். சாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்துவோம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். கடைசியாக இது தேசிய நிகழ்ச்சி நிரலில் சேர்ந்திருக்கிறது. திமுகவின் இரட்டை வேடத்தையும், போலி நிலைப்பாட்டையும் இது வெளிப்படுத்தியிருக்கிறது.

இப்போதும் கூட திமுகவின் நடவடிக்கைகள் முன்னோடி நடவடிக்கையாக, வழிகாட்டும் நடவடிக்கைகள் போலத் தெரியவில்லை. சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளாகவே தெரிகிறது. அவர்கள் சாதிக் கணக்கெடுப்பு பற்றி அமைத்த ஒருநபர் ஆணையத்தை பற்றி புகழ்ந்து தள்ளுகிறார்கள். நிறைய பேசுகிறார்கள். அதில் தெளிவும் இல்லை. போக வேண்டிய திசையும் இல்லை. சாதி ரீதியான கணக்கெடுப்பு விஷயத்தில் எப்போதும் உறுதியாக நின்ற கட்சி அதிமுக.

தொடர்ச்சியான உறுதியான நடவடிக்கை மூலம் செயல்பட்ட கட்சி. திமுக அடையாள ரீதியாக சைகைகளை மட்டுமே காட்டும் கட்சி. எங்களது சாதனைகள் பற்றி நாங்கள் பேச வேண்டியதில்லை. எங்கள் சாதனைகளே பேசும். இடஒதுக்கீடு தொடர்பான வரலாற்றுப் பாதையில் இருந்து அதிமுக மரபு, கொள்கைகளை பிரிக்க முடியாது. 1980களில் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர், பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை வலியுறுத்தினார். ஒட்டுமொத்த ஒதுக்கீட்டை 68 சதவிகிதமாக உயர்த்தினார்.

1990-ம் ஆண்டு, இந்த ஒதுக்கீடு 69 சதவிகிதமாக மாறியது. நீதிமன்றங்கள் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியபோது, ஜெயலலிதா அரசியலமைப்பு வழிமுறைகள் மூலமாக இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தார். இந்திய அளவில் இடஒதுக்கீடு கொள்கையில் உறுதிபட நிலைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அரசியலமைப்பு மூலம் இடஒதுக்கீட்டை பாதுகாத்தவர்கள் நாங்கள். எதிர்ப்புகளைக் கண்டு எப்போதும் நாங்கள் பின்வாங்கியதோ சலனப்பட்டதோ இல்லை. சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தப்போகிறோம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. துணிவு மிக்கது.

இதை வரவேற்கிறோம். வெறும் தரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு சமகால தேவைகளை பூர்த்திசெய்யும் நலத்திட்ட கொள்கைகளை வகுக்க முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். சரியான பிரதிநிதித்துவத்துடன், வளங்கள் சரியாகப் பகிரப்படுவதன் மூலமாகவே நலத்திட்ட கொள்கைகளை வகுக்க முடியும். சாதி ரீதியாக கணக்கெடுப்பு இப்போது தேசிய அளவில் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதன் முக்கியத்துவதைப் புரிந்து கொண்டு இதை ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என மத்தியில் உள்ள எங்கள் கூட்டணி கட்சியினரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த கணக்கெடுப்பு மூலம் சாதிய அடிப்படையில் மக்களின் பரவல், அவர்களது கல்விநிலை, வேலை வாய்ப்பு நிலை, சமூக பொருளாதார நிலை போன்றவற்றை நாடு தழுவிய விதத்தில் தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் இடஒதுக்கீட்டை புதிதாக சிறப்பாக கட்டமைக்க முடியும். சமூகத் திட்டங்கள் எவ்வாறு இலக்கு வைக்கப்படுகின்றன, மத்திய மாநில அரசுகள் இணைந்து உள்ளடக்கிய வளர்ச்சியை நீண்டகாலமாக அவை எவ்வாறு அணுகுகின்றன என்பதை இந்த கணக்கெடுப்பு மறு வடிவமைக்கக் கூடும்.

சாதி வாரி கணக்கெடுப்பை ஆதரிக்க திமுக ஏன் நீண்ட காலமாகத் தயங்கியது? ஒருவர் இந்த கேள்வியைக் கேட்கலாம். தேர்தல் கணக்குகளில் இதற்கான பதில் ஒளிந்திருக்கிறது. ஒளிவுமறைவற்ற தெள்ளத்தெளிவான ஒரு சாதிய கணக்கெடுப்பு சாதி ரீதியான கூட்டணிகளைப் பாதிக்கலாம். அதற்கு தொல்லை தரலாம். சாதி ரீதியான கூட்டணிகளை திமுக நீண்டகாலமாக கவனமாகக் கட்டமைத்து வருகிறது. இதற்கு நேர் எதிராக அதிமுக வசதியான கற்பனைகள், கற்பிதங்களை விட சங்கடம் தருகிற உண்மைகளை நம்புவதே நல்லது என்ற கருதுகிறது.

எங்களைப் பொறுத்தவரை நீதி என்பது எப்போதும் உறுதியாக நிலைநாட்டப்படுவதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் சலனப்படாமல் நிற்கிறோம். திமுக திடீரென சாதி ரீதியான கணக்கெடுப்பை ஆதரிப்பது அதன் கொள்கை சார்ந்த முடிவாகத் தோன்றவில்லை. அரசியல் நெருக்கடி காரணமாக சாதி ரீதியான கணக்கெடுப்பை திமுக ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் இந்த விஷயத்தில் தாமதமாகவும், திசை மாறிய நிலையிலும் உள்ளனர். அதிமுகவோ இதற்கு முரண்பாடாக நேர் எதிராக, தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.

சாதி ரீதியான கணக்கெடுப்பு என்பது நோய் தீர்க்கும் மருந்தல்ல. அது ஒரு முக்கியமான, தேவைப்படும் கருவி. இந்தியாவை அனைத்து மக்களின் சரியான பிரதிநிதித்துவத்துடன் நாம் கட்டியமைக்க வேண்டும் என்றால் மக்கள் யார் யார், அவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் புரிந்துகொள்ள ஆரம்பிக்க வேண்டும். எவ்வளவு தொலைவுக்கு அவர்கள் இன்னும் போக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை வழிகாட்டி மாநிலமாகத் திகழ்கிறது. எடுத்துக்காட்டுகள் மூலம் அது மீண்டும் ஒருமுறை வழிகாட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS Caste census DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->