சந்திரபாபு நாயுடுவிடம் பாடம் கற்பாரா ஈபிஎஸ்? விரக்தியின் விளிம்பில் தொண்டர்கள்...! - Seithipunal
Seithipunal


ஒரு வழியாக நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த நிலையில்  தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தங்களது  பணிகளை செய்ய கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளனர். இதற்கேற்றார்  போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால் மும்முனைப் போட்டி கண்டிப்பாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திமுக ஒரு அணியாகவும் அதிமுக பாஜக பாமக ஓர் அணியாகவும் விஜய் தனியாகவும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தனியாகத்தான் போட்டியிடும் என்று கூறி வந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வி அடைந்துள்ளதால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.

வாக்கு வங்கியும்  சரிந்துள்ளது. மேலும் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் தான் எடப்பாடியின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். ஆதலால் வேறு வழி என்று அரசின் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்காமல் பாஜக பாமக உடனே சேர்ந்து களமிறங்குவார் என்று அரசியல்  வல்லுனர்கள். கூறுகின்றனர். இதற்குச் சான்று அண்டை மாநிலமான ஆந்திரா தான். சிறிய கட்சி என்று பார்க்காமல் ராஜதந்திரத்துடன் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு வெற்றி கண்டார். திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் அரசுக்கு எதிரான வாக்குகள் அதிகரித்துள்ளதையும் மறுக்க இயலாது.

இதற்கு சான்று நாம் தமிழர் மற்றும் பாஜக பெற்ற வாக்குகள் ஆகும். தொடர்ந்து அதிமுக தேர்தலில் தோல்விகளையே சந்தித்து வருவதால் கட்சிக்குள்ளேயும் தலைமைக்கு  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதோடு சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து செயல்படுவோம் என்று எடப்பாடிக்கு நேரடியாகவே அழைப்பு விடுத்துள்ளனர்.

இது கட்சி நிர்வாகிகள் மத்தியில் விவாத பொருளாக மாறி உள்ளது. அதிமுக பிளவுபடாமல் சசிகலா டிடிவி ஓபிஎஸ் என்று அனைவரும் ஒன்றாக இருந்திருந்தால் நிச்சயமாக இப்படிப்பட்ட ஒரு படுதோல்வி ஏற்பட்டிருக்காது என்று அடிமட்ட தொண்டர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். கட்சியின் மேல்மட்ட தலைவர்களும் அரசல் புறசலாக இதையே  பேசி வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்க நேர்ந்தால் அதிமுக என்ற கட்சி மக்களிடமிருந்து அந்நியப்படுவதோடு மட்டுமல்லாமல்  பாஜகவின் வளர்ச்சிக்கும் இது வித்திடும் என்று கருதப்படுகிறது.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு மத்தியில் பாஜக ஆட்சி தொடரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சொல்லும்படியான வெற்றியை பாஜக பெற்றுள்ளது. கேரளாவிலும் தனது கணக்கை துவக்கி உள்ளது. ஆகையால் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக கண்டிப்பாக கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வியூகம்  அமைப்பார்கள். மக்களவைத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் மீது தலைமைக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க திமுக அரசின் பல திட்டங்கள் சாமானிய மக்களிடையே சென்று சேர்ந்திருப்பதற்கு சான்று அவர்கள் பெற்ற வெற்றியாகும். 2026 தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தும் வாய்ப்புள்ளதால் அதற்கு நிகராக அண்ணாமலையை பாஜக முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழல் ஏற்படும் போது அண்ணாமலை உதயநிதி எடப்பாடி பழனிச்சாமி என்று மும்முனைப் போட்டி வரும்போது இயல்பாகவே உதயநிதியா? அண்ணாமலையா? என்று தான் பேசத் தொடங்குவார்கள் மக்கள்.  ஜெயலலிதா தலைமையில் அதிமுக இருக்கும் போது ஒரு தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தலில் பீனிக்ஸ் பறவையாக  வெகுண்டெழுந்து வென்று காட்டுவார்.

ஆனால் அது போன்ற ஒரு செல்வாக்கு எடப்பாடிக்கு மக்களிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம். எந்த ஒரு கட்சியும் தொடர் தோல்விகளை சந்தித்தால் கட்சியின் நாதமாக விளங்கும் தொண்டர்களின் நம்பிக்கையை சீர்குலைத்து பின்னர் அதுவே கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று விடும்.  இது எடப்பாடிக்கும் தெரியாமல் இருக்காது.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சந்திரபாபு நாயுடு போல் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே எம்ஜிஆர் ஆல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு ஏறத்தாழ 35 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட அதிமுக என்ற கட்சி காப்பாற்றப்படும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது. இதை புரிந்து கொண்டு சந்திரபாபு நாயுடு போல் சாணக்கியத்தனத்துடன் செயல்பட்டு மக்கள் மற்றும் கட்சியினரிடையே நம்பிக்கையை விதைப்பாரா ?அல்லது தனி ஆவர்தனம் செய்து கட்சியை அதள பாதாளத்திற்கு கொண்டு செல்வாரா என்பது எடப்பாடியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளே முடிவு செய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Edappadi Palanisamy Elelction 2026


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->