இது நிர்வாக தோல்வியின் உச்சம்! - TNPSC தேர்வு ரத்துக்கு தமிழிசை கடும் கண்டனம்...!
administrative failure Tamilisai strongly condemns cancellation TNPSC exam
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில், சார்–பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்–2 பணிகள் மற்றும் உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட குரூப்–2A பிரிவுகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்ப, இன்று (பிப்.8) மாநிலம் முழுவதும் காலை–மாலை அமர்வுகளாக முதன்மைத் தேர்வுகள் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கான தேர்வர்கள் பல மாதங்களாக தீவிரமாக தயாராகி, நம்பிக்கையுடன் தேர்வு மையங்களுக்கு வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட நிர்வாக அலட்சியம் மற்றும் தொழில்நுட்ப குழப்பங்கள் காரணமாக தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டன.
பல இடங்களில் தேர்வு மையங்கள் முறையாக ஒதுக்கப்படாததால், தேர்வர்கள் அதிருப்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்; சில மையங்களில் தேர்வு தொடங்கிய நிலையில், மற்ற இடங்களில் ரத்து செய்த தகவல் சென்றடையாததும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ‘X’ தளப் பதிவில் கடும் கண்டனம் வெளியிட்டார். “நிர்வாக சீர்கேட்டால் திமுக மாடல் அரசு திணறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே நேரடி சாட்சி. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகள் நொறுங்கியுள்ளன.
வாழ்க்கையை மாற்றும் தேர்வு, இளைஞர்களுக்கு போராட்டமாக மாறியுள்ளது. மைய ஒதுக்கீட்டில் குழப்பம், தகவல் பரிமாற்றத் தவறு – இது நிர்வாக தோல்வியின் உச்சம்,” என்று அவர் சாடினார்.
மேலும், தங்கள் நேரம், பணம், உழைப்பை செலவிட்டு வந்த தேர்வர்களை அலைக்கழிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், மறுதேர்வு அறிவிக்கும் போது முழுமையான திட்டமிடலுடன், எந்த குளறுபடியும் இல்லாமல் நடத்துவது அரசின் கடமை என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வு, இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடக்கூடாது என்ற கடுமையான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
administrative failure Tamilisai strongly condemns cancellation TNPSC exam