வெற்றிக்குப் பின் தோழமை கட்சிகளுக்கு நன்றி கூறிய ஆதவ் அர்ஜுனா...! -அரசியலில் அடுத்த கட்டம் என்ன...?
Adhav Arjuna thanked his fellow parties after victory What next step politics
தமிழக அரசியல் களத்தில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் இந்த வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 144 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
எதிராக 22 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து, நம்பிக்கை தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியதாக சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இந்த அரசியல் வெற்றிக்குப் பின்னர், ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உணர்ச்சிமிக்க அரசியல் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அவர் தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தமிழ்நாடு என்பது சாதாரண அரசியல் மண்ணல்ல; சமரசமற்ற சமத்துவப் போராட்டங்களின் வரலாற்று நிலம். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் தங்களது உரிமைகளையும் எதிர்காலத்தையும் காக்க, சாதாரண மனிதர்களின் கரங்களில் மக்களாட்சியை ஒப்படைத்து புதிய அரசியல் அத்தியாயங்களை உருவாக்கியுள்ளனர்.
1967-ஆம் ஆண்டு அண்ணாதுரை தலைமையில் உருவான மக்கள் எழுச்சி, தமிழர் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 1977-ஆம் ஆண்டு எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையில் நிகழ்ந்த புரட்சி, மக்களின் மனநிலையை மறுபடியும் மாற்றிய வரலாற்றுச் சம்பவமாக அமைந்தது.
அதேபோன்ற வரலாற்றுப் பொறுப்பை அரை நூற்றாண்டுக்கு பிறகு, தமிழக மக்கள் மீண்டும் தங்களது வீட்டுப் பிள்ளையாக கருதிய கழகத் தலைவருக்கும், அவர் வழிநடத்தும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் ஒப்படைத்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “மக்கள் ஆதரவால் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்த நாங்கள், இன்று மதச்சார்பற்ற தோழமை கட்சிகளின் ஒற்றுமையான ஆதரவுடன் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியை பதிவு செய்துள்ளோம்.
இது வெறும் எண்களின் வெற்றி அல்ல; சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்குக் கிடைத்த அரசியல் அங்கீகாரம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.“மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில் உறுதியுடன் பயணிக்கும் எங்கள் அரசுக்கு ஆதரவு அளித்த அனைத்து தோழமை கட்சிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அரசு தமிழ்நாட்டின் உரிமைகளையும், அனைத்து தரப்பு மக்களின் நலன்களையும் பாதுகாக்கும் ஆட்சியாக இருக்கும்” என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.மேலும், “நம் பெருந்தலைவர்கள் காட்டிய கொள்கைப் பாதையில் எந்தவித சமரசமும் இன்றி இந்த அரசு பயணிக்கும்.
மக்கள் நம்பிக்கையை காப்பதே எங்களின் முதன்மை பொறுப்பு. அனைவரும் ஒன்றிணைந்து புதிய தமிழ்நாட்டை உருவாக்கும் வரலாற்றுப் பயணத்தில் கைகோர்ப்போம்” என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.இந்த பதிவு, தவெக அரசின் வெற்றியைத் தொடர்ந்து கூட்டணி அரசியலின் புதிய பரிமாணங்களையும், தமிழக அரசியலில் உருவாகி வரும் மாற்று அதிகாரச் சமநிலையையும் பிரதிபலிப்பதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Adhav Arjuna thanked his fellow parties after victory What next step politics