பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை அதிரடி குறைப்பு...! - பிரதமர் மோடியின் அதிரடி உத்தரவு
Dramatic reduction number security vehicles Prime Minister Modi dramatic order
உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை காரணமாக, பல நாடுகள் கடுமையான பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன. அதன் தாக்கம் இந்தியாவிலும் தீவிரமாக பிரதிபலித்து வரும் நிலையில், சமீபத்தில் வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்துவது தொடர்பான ஆலோசனைகள் மத்திய மட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நாட்டின் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைத்து அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல், பள்ளி மற்றும் கல்லூரிகளும் இணையவழி கல்வி முறையை அதிகப்படுத்தும் வழிகளை ஆராய வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நகர போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு வாகன அணிவகுப்பிலும் சிக்கன நடைமுறைகளை அமல்படுத்த பிரதமர் மோடி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க சிறப்பு பாதுகாப்புப் படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் பயன்பாட்டை கணிசமாக குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், பிரதமரின் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கட்டாய பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் வழக்கம்போல முழுமையாக அமலில் இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் விளக்கியுள்ளன.
மேலும், பிரதமரின் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம்பெறும் தேவையற்ற வாகனங்களை நீக்க வேண்டும் என்றும், “புளூ புக்” பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றமின்றி சிக்கன முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனுடன், பாதுகாப்பு பணிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்த மாற்றத்திற்காக புதிய வாகனங்கள் வாங்க வேண்டாம் என்றும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களையே மாற்று முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், நாட்டின் உயர்மட்ட நிர்வாகத்திலிருந்தே சிக்கன நடைமுறைகள் தொடங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளதாக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dramatic reduction number security vehicles Prime Minister Modi dramatic order