கோவில் நில மோசடியில் 19 பேர் மீது நடவடிக்கை! திமுக தூங்கிக் கொண்டிருந்ததா? அமைச்சர் ரமேஷ் அட்டாக்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோவில் நிலங்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோவில் நில மோசடியில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தாமோதர கிருஷ்ண கோபுரத்தில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்தன. சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற இந்தப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் ரமேஷ் கோபுரத்தை பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த காலங்களில் கோவில் நில மோசடியில் ஈடுபட்ட 19 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

“கோவில் நில மோசடியில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று நிலம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் முறைகேடு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நில அபகரிப்பு தொடர்பாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். நீதிமன்ற உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பழமை வாய்ந்த கோபுரங்கள் படிப்படியாக சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். “கடந்த ஆட்சியில் நில மோசடி தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

இதனிடையே, கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாகவும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார். மன அமைதிக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்ல வேண்டாம் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

திரைக்கலைஞர்கள் அல்லது அரசியல் பிரமுகர்கள் கோவிலுக்கு வரும்போது அவர்களைப் படம் பிடிப்பதற்காக செய்தியாளர்கள் கோவில் வளாகத்திற்குள் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கோவில்களுக்குள் படப்பிடிப்பு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதி செப்டம்பர் மாதத்திற்குள் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கோவில் நில மோசடி புகார்கள் குறித்து பேசிய அமைச்சர், “இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சிக் காலத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்தால், அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அப்போது அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது” என விமர்சித்தார்.

கோவில் நிலங்களைப் பாதுகாப்பது மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action taken against 19 people in temple land scam Was the DMK asleep Minister Ramesh lashes out


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->