திமுகவுக்கு தலைவலியைத் தந்த 2025! செந்தில்பாலாஜி, பொன்முடி ராஜினாமா – திமுக அரசுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி
2025 gave DMK a headache Senthilbalaji Ponmudi resign a severe crisis for the DMK government
2025ஆம் ஆண்டு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்திய ஆண்டாக அமைந்தது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியான அமைச்சரவை மாற்றங்களும், இரண்டு முக்கிய அமைச்சர்களின் ராஜினாமாவும் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை கிளப்பின.
2021 மே மாத சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை அமைச்சரவை மாற்றங்கள் நடந்தன. 2022 மார்ச் மாதத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டார். அதே ஆண்டில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இணைந்தார். தொடர்ந்து துறைகள் மாற்றம் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
2023ஆம் ஆண்டு அமைச்சரவை மாற்றங்களில் முக்கிய திருப்பமாக, நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடமிருந்து அந்தத் துறை பறிக்கப்பட்டு, தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்டது. பி.டி.ஆருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் டி.ஆர்.பி.ராஜா பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதால், அவரிடம் இருந்த மின்சாரம் உள்ளிட்ட துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டன. பின்னர் பிணையில் வெளியான செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விலகினார். பின்னர் வழக்கில் தற்காலிக தடை கிடைத்ததும், அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டு உயர்கல்வித் துறை வழங்கப்பட்டது. 2024 செப்டம்பர் மாதத்தில் நடந்த மற்றொரு முக்கிய மாற்றத்தில், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
2025ஆம் ஆண்டில் அரசியலில் மிகப்பெரிய அதிர்வலை கிளப்பிய சம்பவங்களாக செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி ராஜினாமாக்கள் அமைந்தன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் கேள்விகளை எழுப்பியது. பதவியில் தொடர்வது வழக்கை பாதிக்கக்கூடும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியதை அடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். திமுக இதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூறினாலும், இது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இதற்கிடையே, சைவம்–வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. சமூக வலைதளங்கள் முதல் அரசியல் மேடைகள் வரை எதிர்ப்பு எழுந்த நிலையில், நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பியது. இறுதியில் பொன்முடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டார். இது 2025ஆம் ஆண்டின் மிகப்பெரிய அரசியல் சர்ச்சைகளில் ஒன்றாக பதிவானது.
இந்த இரண்டு ராஜினாமாக்களும் திமுக அரசுக்கு கடும் அழுத்தத்தை உருவாக்கியதுடன், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரங்களை முன்வைத்து அரசை தீவிரமாக தாக்குவதற்கும் வாய்ப்பளித்தன. 2025ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கான ஒரு சவாலான ஆண்டாகவே அரசியல் பார்வையாளர்கள் இதனை மதிப்பிடுகின்றனர்.
English Summary
2025 gave DMK a headache Senthilbalaji Ponmudi resign a severe crisis for the DMK government