நவராத்திரி...பூஜை பாடல்கள்..!
navarathiri songs
பூஜை பாடல்கள் :
துர்க்காஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்ற பாடல்களை - ஸ்லோகங்களை படிக்கலாம் அல்லது கேசட்டில் ஒலிக்கவும் செய்யலாம்.
நவராத்திரி கொலுவில் கும்பம் வைப்பது மிகவும் முக்கியமானது. நறுமணம் மிக்க சந்தனம், பூக்கள் இவைகளோடு மாதுளை, வாழை, பலா முதலியவற்றை அம்பாளுக்குப் படைக்கலாம். கும்பத்தில் புனுகு, கோரோனை, பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ இவற்றுடன் பன்னீர் சேர்த்து கும்பம் வைத்து அதைப் பிரதான அம்மனாக வைத்து வழிபடலாம்.
பூஜை நேரம் :
தினமும் காலையிலும், மாலையிலும் கொலு பொம்மைக்கு பூஜை செய்ய வேண்டும்.
மாலையில் 5.30 முதல் 7.00 மணிக்குள் கூட்டு பிரார்த்தனை மற்றும் பூஜை செய்வது நல்ல பலன்களை அளிக்கும்.
விரதம் இருப்பவர்கள் தங்களது விரதத்தை 6 மணிக்கு மேல் முடித்து கொள்ளவும்.
நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?
நவம் என்றால் ஒன்பது என்று பொருள். நவராத்திரியின்போது பொம்மை அல்லது குழந்தைகளை இறைவன் வடிவில் அலங்கரித்து கொலு வைப்பார்கள். ஏன் நவராத்திரிக்கு கொலு வைக்கிறார்கள் என்று தெரியுமா?
ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.
இந்த கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை உணர்த்தவே இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை இது. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் போன்ற வேடங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்த தெய்வங்களே குழந்தைகள் உருவில் தங்கள் வீட்டிற்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.
எல்லா உயிர்களிலும் இருக்கும் ஆதிபராசக்தி தேவியை போற்றி எந்நாளும் குறையில்லாமல் நலமுடன் வாழ்வோமாக.