மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன.? அதன் நன்மைகள் என்னென்ன.?!
Rain water harvesting
மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?
மழைநீர் சேகரிப்பு :
மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும்.
பெய்யும் மழை நீரை சேமித்து, பாதுகாப்பாக பத்திரப்படுத்தி நமக்கு தேவையானபோது பயன்படுத்திக் கொள்வதே மழைநீர் சேமிப்பு ஆகும். நமது வீட்டிற்கு மேல் பெய்யும் மழையை அதாவது வீணாகும் மழை நீரை சேமித்தல், பாதுகாத்தல், சுத்தம் செய்து பயன்படுத்துவதே மழைநீர் சேகரிப்பு ஆகும்.
மழைநீரை சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம்.
வீடுகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காக தயார் செய்யப்பட்ட குழாய் வழியாக தரையில் சேகரிக்கப்படும் மழைநீரை குடிநீருக்கான முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.
சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம். இத்திட்டம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடியது.
ஏன் மழைநீரை சேகரிக்க வேண்டும்?
இன்று தரமான, சுத்தமான தண்ணீர் நமது அன்றாட பயன்பாட்டிற்கு கிடைப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதால், மழைநீரை சேமிக்க வேண்டும். நம்மிடமுள்ள தண்ணீரிலேயே மழைநீர் தான் மிகவும் சுத்தமானதும், தரமானதும் கூட. எனவே இப்படியொரு தரமான நீரை வீணாக்காமல் சேமித்தால் நல்லது.
மழைநீர் சேகரிப்பின் நன்மைகள்:
நிலத்தடியிலிருந்து கிடைக்கும் நீருற்று மற்றும் அரசு வழங்கும் தினசரி குடிநீருடன், மழைநீரும் உபயோகப்படும்.
கிடைக்கும் மழைநீரை பயன்படுத்தி கட்டிடம் கட்டலாம், விவசாயமும் செய்யலாம்.
அதிக தரமான நீர். எவ்வித நச்சுக்களோ, ரசாயனப் பொருட்களோ கலக்காத சுத்தமான நீர் இந்த மழைநீர்.
இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு.
மழைநீர் அறுவடையினால் வெள்ள சேதம் குறையும், மேல் மண் அடித்து செல்வதும் தடுக்கப்படுகிறது.
மழைநீர் சேகரிப்பில் கிடைக்கும் நீரை எதற்கு பயன்படுத்தலாம்?
குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமையல் செய்வதற்கு, துணி துவைப்பதற்கு, கழிவறைகளில் பயன்படுத்தலாம்.
பயிர்களுக்கு பாசனம் செய்ய, கால்நடைகளுக்கு என எல்லா தேவைகளை பூர்த்தி செய்யவும் சேமிக்கும் மழை நீரை பயன்படுத்தலாம்.