ஏன் நெல்லியில் மட்டும் இவ்வளவு சிறப்பு?
gooseberry
கனிகளில் இரண்டு வகை கனிகளுக்கு மட்டும்தான் 'ராஜ கனி" என்று பெயர். ஒன்று எலுமிச்சை இன்னொன்று நெல்லிக்காய். நாம் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளாத நெல்லிக்கனியை குறித்து நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஏன் இந்த நெல்லியில் இவ்வளவு சிறப்பு?

நெல்லி மரத்தின் பூ, கனி, காய், இலை, மட்டை போன்று அனைத்துமே மருத்துவக்குணம் உடையவை. இக்கனியின் பயன்கள் எண்ணிலடங்காதது. நெல்லிக்கனியை வெட்டி சாறாக்கி, சூரிய வெப்பத்தில் காயவைத்து மற்றும் சிலர் உப்பு மிளகாய் பொடி சேர்த்து சாப்பிடுவார்கள். எந்த வகையில் உட்கொண்டாலும் இதன் சத்துக்கள் அப்படியே இருப்பது இதன் தனி சிறப்பாகும். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவது உண்டு.
ரத்தக்குழாய் அடைப்புகள் வராமல் பாதுகாக்கும் :
வைட்டமின் 'சி" நிறைந்த நெல்லிக்கனியை சாறாக்கி வெந்நீரில் குடிப்பது நம் உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைத்து ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். இதய கோளாறு, நரம்பு தளர்ச்சி, இளநரை உள்ளவர்கள் தினம்தோறும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் நல்லது.

கண்களின் பாதுகாவலன் நெல்லிக்கனி :
இன்றைய காலக்கட்டத்தில் கண் கண்ணாடி அணியாதவர்கள் ஒரு சிலரே. செல்போன், கணினி முன்பு அதிக நேரம் செலவிடுவோர், கண் நோய் உள்ளவர்களுக்காகவே நெல்லி சிறந்த மருந்தாக திகழ்கிறது.
என்றும் இளமை :
இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. இந்த அவசர உலகத்தில் தகுந்த உடற்பயிற்சி செய்வதற்கு நேரமும் இல்லை, பாரம்பரிய இயற்கை உணவுகளை உண்ணுவதும் இல்லை. அதனால் 30 வயது கடந்த மக்கள் 50 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும்முறை எப்படி?
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மேலும், முதுமையை விரட்டும் தன்மை கொண்டது.
"ஆண்டி ஆக்ஸிடேட்" என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.
அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாற்றை அருந்திவிட்டு சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது.