புதிய அரசு அமைந்து ஒரு நாளுக்குள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குக்கி மக்கள்; மீண்டும் கலவர காடான மணிப்பூர் ..!
Within a day of the new government being formed in Manipur protests erupted against the government
மணிப்பூரில் புதிய அரசு அமைந்த 24 மணி நேரம் மட்டுமே ஆகிறது இந்நிலையில், சுராசந்த்பூர் மாவட்டத்தில் மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அம்மாநிலத்தில் சூரசந்த்பூர் மாவட்டத்தில் துய்போங் பகுதியில் புதிய அரசுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், பாதுகாப்பிற்காக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது கும்பலை கலைக்க முயன்ற பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 04 அன்றுதான் ஜனாதிபதி ஆட்சியில் ஓராண்டு காலம் இருந்த மணிப்பூரில் மீண்டும் பா.ஜ.க தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. யும்னம் கெம்சந்த் சிங் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். குக்கி சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நெம்சா கிப்ஜென் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது, குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் புதிய அரசில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி-ஜோ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சமூகத்தின் ஒப்புதல் இன்றி அவர்கள் அரசில் இணைந்தது "துரோகம்" என போராட்டக்காரர்கள் கருதும் நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
இன்று மாலையில் துய்போங் பகுதியில் போராட்டக்காரர்கள் டயர்களுக்குத் தீ வைத்து சாலைகளை மறித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குக்கி-ஜோ குழுக்களின் கூட்டமைப்பு நாளை குக்கி மக்கள் வசிக்கும் பகுதிகளில் 12 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பும் விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகளும் பிரிவினரும், மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று குக்கி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் புதிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Within a day of the new government being formed in Manipur protests erupted against the government