சேலம் || கணவருக்காக 35 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்ட மனைவி.! நடந்தது என்ன?.
wife 35 days protest for husband in salem
கணவருக்காக 35 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்ட மனைவி.! நடந்தது என்ன?.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகள் பவித்ரா. பி.எஸ்சி மயக்கவியல் படித்துள்ள இவர் அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மோகன் என்பவரை 10 ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.
இதுகுறித்த தகவல் பெற்றோருக்கு தெரிந்ததும் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் மோகனின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அதை பார்ப்பதற்காக மோகன் தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

ஆனால், அதற்குப் பிறகு அவர் சென்னைக்கு திரும்பி வரவில்லை. மனைவியையும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பவித்ரா வேலகவுண்டனுாரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அங்கு அவரை கணவரின் பெற்றோரான முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக பவித்ரா கடந்த ஜூலை 24ல் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும், ஓமலுார் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். கணவர், மாமனார், மாமியார் உள்பட 7 பேர் மீது மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பவித்ரா, வேலகவுண்டனுாரில் உள்ள கணவர் வீடு முன்பு உறவினர்களுடன், தர்ணாவில் ஈடுபட்டார்.

இன்று 35வது நாளாக இந்தத் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பவித்ரா கூறுகையில், ''கடந்த ஆகஸ்ட் 23 முதல் தர்ணாவில் ஈடுபடுகிறேன். இடையில், 2 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு சென்றேன். கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அதற்கு வழி ஏற்படுத்தினால் போதும். அதுவரை போராட்டம் தொடரும்'' என்றுத் தெரிவித்தார்.
English Summary
wife 35 days protest for husband in salem