ரயில் விபத்தால் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்கள்.. அஸ்வினி வைஷ்ணவ் நிலைப்பாடு என்ன.? நெருக்கடியில் பாஜக..!! - Seithipunal
Seithipunal


ஒரிசா மாநிலம் பஹாகானா ரயில் நிலையத்தில் நேற்று மாலை 6:50 மணி அளவில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு ஹவுரா இடையான எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தற்போது வரை 294 பேர் உயிரிழந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான ரயில் விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று தற்போது வரை மூன்று மத்திய ரயில்வே அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த 1956 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 1999 ஆம் ஆண்டு அசாமில் நடந்த காய்சால் ரயில் விபத்தில் 290 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று அப்போது மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோன்று கடந்த 2000ம் ஆண்டு மத்திய ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்தபோது இரண்டு ரயில் விபத்துக்கள் ஏற்பட்டது. இதற்கு பொறுப்பேற்று அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆனால் அதனை வாஜ்பாய் ஏற்க மறுத்து விட்டார். 

சமீபத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு கலிங்கா - உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்த நிலையில் நேற்று மாலை ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் தற்போது வரை 294 பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இந்த கோர விபத்தை அரசியலாக்க விரும்பவில்லை என கருத்து தெரிவித்துள்ளன. இருப்பினும் இந்த விபத்துக்கு பொறுப்பேற்று தற்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலகுவாரா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் அரசியல் ரீதியில் இந்த விவகாரம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு தரும் என்பதால் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முடிவைப் பொறுத்தே அமையும். நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளதால் இந்த விவகாரத்தால் பாஜகவுக்கு அரசியல் ரீதியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union ministers who resigned due to train accidents


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->