ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மக்கள் தொகை மாற்றங்களை ஆராய உயர்மட்ட குழு; உள்துறை அமைச்சர் அமித்-ஷா அறிவிப்பு..!
Union Government Constitutes High Level Committee Led by Retired Judge to Examine Demographic Changes
நாட்டில் மக்கள் தொகை மாற்றங்களை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இயல்புக்கு மாறான மக்கள் தொகை மாற்றங்கள் எந்த ஒரு நாட்டின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் மிகக் கடுமையான சவாலாக அமைகின்றன.
இந்தச் சவாலைக் கையாள்வதற்காக மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அந்த அறிவுப்புக்கு இணங்க மத்திய அரசு தற்போது குழு ஒன்றை அமைத்துள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் தலைமையில் செயல்படும் இக்குழுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருடன் இணைந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி துர்கா சங்கர் மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவா, டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெறுவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வெளிநாட்டினர்-1) இக்குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றுவார்.
மக்கள் தொகை மாற்றம் என்பது நமது இறையாண்மைக்கு மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சமூக கட்டமைப்பில் ஏற்படும் ஆழமான மாற்றங்கள், பழங்குடியினச் சமூகத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடனும் தொடர்புடைய ஒரு தீவிரமான பிரச்சினையாகும்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இயல்புக்கு மாறான காரணங்களால் நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து இக்குழு ஒரு விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளும்.
மத மற்றும் சமூக மட்டத்தில் நிகழும் அசாதாரண மக்கள் தொகை மாற்றங்களின் போக்குகளைப் பகுப்பாய்வு செய்யும். மேலும், இதற்கான ஒரு திட்டமிடப்பட்ட, காலவரையறைக்கு உட்பட்ட தீர்வை முன்வைக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Union Government Constitutes High Level Committee Led by Retired Judge to Examine Demographic Changes