விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு மிக உயரிய வீரதீர விருதான 'அசோக சக்ரா' விருது அறிவிப்பு..!
The Ashok Chakra award has been announced for astronaut Subhanshu Shukla
இந்திய விண்வெளி வீரரான, இஸ்ரோவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவிற்கு இந்தியாவின் மிக உயரிய அமைதிக்கால வீரதீர விருதான 'அசோக சக்ரா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2025 இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ஆக்ஸியம்-4 விண்வெளிப் பயணத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார். விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு இவர் இரண்டாவது வீரர் ஆவார்.
சுபான்ஷு சுக்லாவிற்கு அண்மையில் உத்தரப் பிரதேச அரசால் 'உத்தரப் பிரதேச கௌரவ் சம்மான்' விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

சுபான்ஷு சுக்லா
லக்னோவைச் சேர்ந்த ஷம்பு தயாள் மற்றும் ஆஷா தம்பதியினரின் மூன்றாவது பிள்ளையாகநடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். விண்வெளி வீரராக வேண்டும் என்பது உங்களது சிறுவயது கனவா என்று முன்னதாக ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு சுபான்ஷு சுக்லா, "இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா 1984-இல் விண்வெளிக்குப் பயணம் செய்தார்; நான் 1985-இல் பிறந்தேன். அவர் விண்வெளிக்குச் சென்றபோது நான் பிறக்கவில்லை, ஆனால், அவருடைய கதைகளைக் கேட்டும், அவருடைய படங்களைப் பார்த்தும், விண்வெளியில் இருந்து அவர் அனுப்பிய செய்திகளைப் பாடப்புத்தகங்களில் படித்தும் நாங்கள் வளர்ந்தோம்.
அவருடைய பயணத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன், ஆனால், ஒரு விண்வெளி வீரராக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அப்போது தோன்றவில்லை, ஏனெனில் அப்போது நம் நாட்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் இல்லை." என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
English Summary
The Ashok Chakra award has been announced for astronaut Subhanshu Shukla