டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கட்சிக்காரர் - வழக்கறிஞர்கள் இடையே பயங்கர மோதல்: நடந்தது என்ன..?
Terrible clash between client and lawyers in Delhi court premises
டெல்லியில் நீதிமன்றத்திற்கு நீதிபதி வராததால் காரணத்தினால், கட்சிக்காரர் ஒருவர் பெண் வழக்கறிஞரைத் தாக்கியதோடு, பதிலுக்கு அவரை வழக்கறிஞர்கள் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12-ஆம் தேதி டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், நடந்த இந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கட்சிக்காரர் ஒருவரை வழக்கறிஞர்கள் குழுவாகச் சேர்ந்து சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால், இதுதொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றது. குறித்த மோதல் தொடர்பில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்த அடிதடி குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் கூறுகையில், நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதி வரவில்லை. இதனால் கட்சிக்காரர் ஆத்திரமடைந்து, தனது இளநிலை வழக்கறிஞரை படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதைத் தடுக்க முயன்ற பெண் வழக்கறிஞரைத் தாக்கி, அவரிடம் தவறாக நடந்துகொண்டார் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சக வழக்கறிஞர்கள், அந்த நபரைத் தாக்கியதாகக் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கட்சிக்காரர் தரப்பில் முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹர்ஷ் என்ற அந்த கட்சிக்காரர், தனது வழக்கு தொடர்பான கோப்புகளை வழக்கறிஞரிடம் திருப்பிக் கேட்டுள்ளார். அவர் கோப்புகளைத் தர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது என்று கூறியுள்ளார்.

அத்துடன், சம்பவத்தின் போது ஹர்ஷையும், அவருடன் வந்த 70 வயது தாயையும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருடன் சேர்ந்து சிலர் தாக்கியதாகக் கூறியுள்ளனர். இந்த மோதல் சம்பவம் குறித்து, இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில், டெல்லி போலீசார் இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும், பெண் வழக்கறிஞரைத் தாக்கியதாக ஹர்ஷ் மீதும், அவரையும் அவரது தாயையும் தாக்கியதாக சில வழக்கறிஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெறுகிறது.
English Summary
Terrible clash between client and lawyers in Delhi court premises