10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுத சிறுபான்மையின மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு - உச்சநீதிமன்றம் உத்தரவு.!
tamil exam one year exempition to Minority students in tenth class public exam supreme court order
தமிழகத்தில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.
இதன் காரணமாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருது உள்ளிட்ட பிறமொழி பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில், பிறமொழி மாணவர்களும் தமிழ் தேர்வை எழுதுவதற்கு எதிராக விலக்கு அளிக்க கோரி, தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று, நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வின் முன்பு நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில், "தமிழ்நாடு மாநிலத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் தான் இருமொழி கொள்கை அமலில் உள்ளது.
இந்தக் கொள்கையினால் மொழிவாரி சிறுபான்மையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று வாதிடப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில், 2022-23 கல்வியாண்டில், மனுதாரர் பிரதிநிதித்துவப்படுத்தும் 863 மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும்" என்று வாதிடப்பட்டது.
இந்த இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
English Summary
tamil exam one year exempition to Minority students in tenth class public exam supreme court order