சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்துள்ள முதல் இந்தியனாக சுபான்ஷு சுக்லா: பெருமிதம் கொள்ளும் இந்தியா..!
Subhanshu Shukla sets foot on the International Space Station
டிராகன் விண்கலம் வாயிலாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் இன்று ( ஜூன் 26) சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் வெற்றிகரமாக சென்றடைந்துள்ளனர். அவர்கள் நான்கு பேருக்கும் அங்குள்ள விஞ்ஞானிகள் வரவேற்பு பானம் வழங்கி வரவேற்றுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் 'ககன்யான்' திட்டத்தை 2027-இல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் இஸ்ரோ மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்டது. அதன்படி, 'ஆக்சியம் - 4' திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா(39), அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இவர்கள் நால்வரும் நேற்று பகல் 12:01 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விண்வெளிக்கு புறப்பட்டனர். தொழிலதிபர் எலான் மஸ்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் வாயிலாக, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேரையும் சுமந்து, 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் புறப்பட்டது. இதையடுத்து, விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரும் விண்வெளியில் 28 மணி நேரம் பயணம் செய்து, பூமியில் இருந்து 400 கி.மீ., தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைந்த்துள்ளனர். சுபான்ஷு சுக்லா அங்கு கால் வைத்ததும், சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
குறித்த நான்கு விண்வெளி வீரர்களும் அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். அங்கு அவர்கள் மொத்தம் 60 ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில், முக்கியமானதாக ஏழு ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, விண்வெளியில் பிராண வாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள் வளர்ச்சி உள்ளிட்ட ஆய்வில் சுக்லா ஈடுப்படவுள்ளார். அத்துடன், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து, நம் நாட்டின் மிக முக்கிய பிரமுகர் ஒருவருடன் அவர் பேசுவார் என்றும் தெரிவிப்பட்டுள்ளது. இந்த பயணம் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு செல்லும் முதல் வீரர் என்ற பெருமையும் சுபான்ஷூ சுக்லாவுக்கு கிடைத்துள்ளது.
English Summary
Subhanshu Shukla sets foot on the International Space Station