நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள்: ஓடிவந்து உதவிய இலங்கை கடற்படையினர்..!
Sri Lankan Navy rescues Tamil Nadu fishermen who were stranded after their boat sank in the middle of the sea
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடலில் படகு மூழ்கியதில் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
02 நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடி பகுதியில் நாட்டுப்படகில் பிரகாஷ், சதீஷ், குகன், நம்பு பிரகாஷ் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் இவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் படகு கடலில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களையும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் உடனடியாக மீட்டுள்ளனர்.

அத்துடன், கடலில் மூழ்கி கிடக்கும் அந்த படகை மீட்பதற்காக ராமேசுவரத்தில் மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று 03 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். அந்த படகை மீட்க முடியாமல் திணறிய போது, அங்கு ரோந்துக்கு வந்த இலங்கை கடற்படையினர் மூழ்கிய படகை மீட்பதற்கும் உதவி செய்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் படகுடன் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த செயல் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, படகு மீட்கப்பட்டாலும் படகின் என்ஜின் பெரிய அளவில் சேதம் அடைந்ததால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Sri Lankan Navy rescues Tamil Nadu fishermen who were stranded after their boat sank in the middle of the sea