லடாக்கில் வன்முறையை தூண்டியதாக குற்றசாட்டு: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது..!
Social activist Sonam Wangchuk arrested under National Security Act for inciting violence in Ladakh
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை விரைவில் லடாக்கிலிருந்து வெளியேற்றி, வேறு மாநில சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
லடாக் யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க கேட்டு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. குறித்த பேச்சுவார்த்தை கடந்த 04 மாதமாக கிடப்பில் போடப்பட்டதால் சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் செப்டம்பர் 10-ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்தார்.

அப்போது, உண்ணாவிரதம் இருந்த 02 பேர் மயக்கம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அத்துடன், அவர்கள் பேரணியாக சென்ற போது அங்கு வன்முறை வெடித்தது.
இதன்போது பாதுகாப்பு படையினருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டதோடு, பா.ஜ அலுவலகம், பாதுகாப்பு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அப்போது கண்ணீர்குண்டு வீசப்பட்டதோடு, தடியடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் பலியாகியுள்ளதோடு, 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் லடாக்கை உலுக்கியுள்ளது.

இந்நிலையில் லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் எனக் கூறி, போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 02:30 மணிக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சோனம் வாங்சுக் விரைவில் லடாக்கிலிருந்து வெளியேற்றி, வேறு மாநில சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் வாங்சுக் வன்முறையை தூண்டிவிட்டதாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Social activist Sonam Wangchuk arrested under National Security Act for inciting violence in Ladakh