பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கொள்கையாக வைத்துள்ளது; பயங்கரவாத முகாம்களை ஒழிக்காத வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது; சசி தரூர் திட்டவட்டம்..!
Shashi Tharoor says no talks with Pakistan until it eliminates terror camps
பயங்கரவாத முகாம்களை அழிக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்காது என காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார். அத்துடன்,பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா புரிந்து கொண்டு உள்ளது என்றும், நெற்றியில் துப்பாக்கி வைத்து பேச்சுவார்த்தை நடக்கும் என்பதை நம்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
'ஆபரேஷன் சிந்தூர் ' நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள நிலையில், சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியாவுக்கு சென்றுள்ளது.கொலம்பியா கவுன்சில் உறுப்பினர்களுடன், சசி தரூர் கலந்துரையாடிய போது கூறியதாவது:-

அஹிம்சை மூலம் அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்திய மஹாத்மா காந்தியின் மண்ணைச் சேர்ந்தவர்கள். எங்களை பொறுத்தவரை அமைதி என்பது சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என்றும், பயத்தில் இருந்து விடுதலை பெற்றதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைதிக்கான மனிதரான மஹாத்மா காந்தி, ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாம் அமைதியாக அமர்ந்து கொண்டு, கன்னத்தை வேறு பக்கம் திருப்ப முடியாது எனவும், நமது நம்பிக்கையில் எது சரி என நினைக்கிறோமோ அதற்காக துணிவுடன் நிற்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியா அதனை சரியாக செய்து வருகிறதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளதாகவும், நமது நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தை நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தனது கொள்கையாக வைத்துள்ளது என்றும், அந்நாடு பயங்கரவாத முகாம்களை ஒழிக்கும் போது, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி யோசிக்க முடியும் என்றும் அதுவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். காஷ்மீர் வளர்ந்து கொண்டிருக்கும்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்த போது, பயங்கரவாதிகள் இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டனர். இதனால், காஷ்மீரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
English Summary
Shashi Tharoor says no talks with Pakistan until it eliminates terror camps