இந்தியாவிலேயே முதல்முறை; கேரளா அமைச்சரவையில் AI தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்..!
Separate Minister Appointed for AI Technology in the Kerala Cabinet
நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கேரளாவில் கடந்த பத்தாண்டுகாலமாக ஆட்சி செய்த இடதுசாரி (LDF) படுதோல்வியடைந்துள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 102 இடங்களைக் கைப்பற்றி UDF கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே தனியாக 63 இடங்களை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரளாவின் 24-வது முதலமைச்சராக வி.டி. சதீசன் கடந்த திங்களன்று தனது 20 பேர் கொண்ட அமைச்சரவையுடன் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, இன்று அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சரவை ஒதுக்கீட்டில், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதாவது, இந்தியாவிலேயே முதன்முறையாக, தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) துறைக்கென தனி அமைச்சகம் இந்த புதிய அமைச்சரவையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'செயற்கை நுண்ணறிவு', தகவல் தொழில்நுட்பம் (IT), தொழில் மற்றும் வர்த்தகம் மற்றும் ஸ்டார்ட்-அப் ஆகிய முக்கியத் துறைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் மூத்த தலைவரான 74 வயது பி.கே. குஞ்ஞாலிக்குட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கேரளாவை தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறை வளர்ச்சியை நோக்கியும், ஏஐ-ஆல் இயங்கும் ஆளுகையை நோக்கியும் கொண்டு செல்லும் முக்கியப் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், செயற்கை நுண்ணறிவு அமைச்சராக 74 வயதுடைய ஒருவருக்கு வழங்குவதற்கு பதில், இளம் அமைச்சர் ஒருவருக்கு வழங்கி இருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
.
English Summary
Separate Minister Appointed for AI Technology in the Kerala Cabinet