தலித் இஸ்லாமியருக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்குக..! இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
Petition filed SupremCourt demand SC status for Dalit Muslims
உச்ச நீதிமன்றத்தில் ஜமீயத் உலாமா ஐ ஹிந்த் என்ற அமைப்பு தலித் இஸ்லாமியர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் "இஸ்லாமிய மதம் சமத்துவ கொள்கை அடிப்படையிலானது. இந்த மதத்தில் ஜாதிகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் சாதி அமைப்புகள் இருக்கின்றன.
இஸ்லாம் மதம் சாதிகள் இல்லாதது என்ற அடிப்படையில் கடந்த 1950ம் ஆண்டு குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தலித் முஸ்லிம்கள் எஸ்.சி பிரிவில் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக இஸ்லாம் மதத்தில் பின்தங்கிய வகுப்பினர் சாதி அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகின்றனர்.
இந்தியாவில் ஹிந்து, சீக்கியம், புத்த மதத்தில் உள்ள தலித் மக்கள் எல்லாம் எஸ்.சி பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டில் சலுகைகளை அனுபவித்து வரும் பொழுது அதே உரிமையை தலித் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த பாகுபாடு அரசியல் அமைப்பு சாசனத்தின் 14 வது பிரிவின் கீழ் விதிமுறை மீறல் ஆகும்.
தலித் இஸ்லாமியர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து மறுக்கப்படுவதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களால் இதர மதங்களில் உள்ள எஸ்.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சலுகைகளை பெற முடியவில்லை. இஸ்லாமியர்கள் மற்றும் இதர மதத்தினரில் உள்ள எஸ்.சி மக்களுக்கு இடையே இடைவெளி அதிகரித்து காணப்படுகிறது.
பல மதங்களை சேர்ந்த தலித் மக்களில் நகர்ப்புறங்களில் உள்ள 47 சதவீதம் தலித் இஸ்லாமியர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களில் உள்ள தலித்துகளை விட இஸ்லாமிய தலித்துகள் அதிகம். கிராமப்புறங்களில் 40% தலித் இஸ்லாமியர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.
எனவே தலித் இஸ்லாமியர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டும் நிலையில் இஸ்லாமிய அமைப்பின் இந்த பொதுநல வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
English Summary
Petition filed SupremCourt demand SC status for Dalit Muslims