இந்திய ராணுவம் தொடர்பான இணையதளங்களை, பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைப்பற்ற முயற்சி..!
Pakistani hackers attempt to hijack Indian Army websites
இந்திய ராணுவம் தொடர்பான இணையதளங்களை, பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைப்பற்ற முயற்சித்துள்ளதால் இந்திய சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், தகுந்த முன்னெச்சரிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிகின்ற நிலையில், பாதுகாப்பு தொடர்பான இணையதளங்கள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஹேக்கர்கள் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறை சம்பந்தப்பட்ட இணையதளங்கள் மற்றும் தரவுகளை கைப்பற்ற பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர் குழுக்கள் முயற்சித்தன என்றும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை பணியாளர்களின் முக்கிய தகவல்களை திருட முயற்சிகள் நடந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ராணுவ பொறியாளர் சேவைகள் மற்றும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் முக்கியமான தரவுகளை பெற முயற்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான 'ஆர்மர்டு வெஹிக்கிள் நிகாம் லிமிடெட்' நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் இந்தக் குழு சிதைக்க முயன்றது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த நிறுவன வலைத்தளம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது, எனவும், மேலும், சைபர் பாதுகாப்பு நிபுணர்களும் நிறுவனங்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், டிஜிட்டல் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், ஊடுருவல் முயற்சிகளுக்கு எதிராக பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Pakistani hackers attempt to hijack Indian Army websites