இன்ஸ்டாகிராம் குழந்தை பாலியல் விளம்பரச் சர்ச்சை: மெட்டா இந்தியா தலைவருக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன்!
NCPCR Summons Meta India Chief Over Instagram Child Abuse Ads Controversy
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, மெட்டா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவரை இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகுமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக, இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்கள் வெளியானதாக ஊடகப் புலனாய்வு அறிக்கை மூலம் தகவல் வெளியானது. இது தொடர்பாக உடனடியாகத் தலையிட்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் பெறுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, இத்தகைய சட்டவிரோத விளம்பரங்களை உடனடியாக முடக்கவும், இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரியிருந்தது. மெட்டா அளித்த முதற்கட்ட பதிலைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் உண்மைத்தன்ையைக் கண்டறிய அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ள ஆணையம், மெட்டா இந்தியாவின் தலைமை அதிகாரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் பிறப்பித்துள்ளது. குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின் (POCSO) கீழ், ஆன்லைன் தளங்களில் இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விளம்பரங்களை அனுமதிக்கும் நடைமுறைகள் குறித்து இந்த விசாரணையில் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
NCPCR Summons Meta India Chief Over Instagram Child Abuse Ads Controversy