சாதி கலவரம், பதற்றம் : 144 தடை உத்தரவு, 5 நாள் இன்டர்நெட் முடக்கம்.!
Manipurs Bishnupur area
மணிப்பூர் மாநிலம், பிஷ்னுபூர் பகுதியில் வேன் ஒன்றுக்கு தீ வைத்ததில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சாதிக் கலவரமாக மாறியதால், மேலும் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படுவதாக மணிப்பூர் மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில கூடுதல் தலைமை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
"பிஷ்னுபூர் மாவட்டத்தில் நேற்று மாலை வேன் தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பிஷ்னுபூர் மாவட்டத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெறுப்புணர்வை பரப்பும் வகையிலான செய்திகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படுகிறது". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.