பள்ளி மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் - விடுதி காப்பாளர் வெறிச்செயல்.!
man arrested for harassment to school students in kerala
கேரள மாநிலத்திலுள்ள இடுக்கி மாவட்டம் தொடுபுழா என்ற பகுதியில், பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், கருநாகப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜீவ் என்பவர் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் கடந்த சில நாட்களாகவே கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததை ஆசிரியர்கள் பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மாநில பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் அங்கு வந்து விசாரணை நடத்திய போது, விடுதியின் காப்பாளர் தங்களிடம் மிகுந்த கடுமையோடு நடந்து கொள்வதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதைக்கேட்டு சந்தேகம் அடைந்த அதிகாரிகள், தனித்தனியாக மாணவர்களிடம் கவுன்சிலிங் மேற்கொண்டனர். அப்போது, 5 மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடூரங்களை கண்ணீருடன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அதாவது, விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவர்களை விடுதியில் வேறு யாரும் இல்லாத போது, தனது அறைக்கு வருமாறு ராஜீவ் கட்டாயப்படுத்தி, அங்கு இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர்கள் கடுமையான பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் ராஜீவை, போக்சோ பிரிவின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதித்துறை நடுவர், நேரில் சென்று மாணவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் வழங்கப்படும் எனவும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த 5 மாணவர்கள் மட்டுமின்றி, பிற மாணவர்களுக்கும் ராஜீவ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for harassment to school students in kerala