ஈரான் எதிர்ப்பு நடவடிக்கையில் விபத்து...! - அமெரிக்க KC-135 விமானம் ஈராக்கில் கீழே விழுந்து நொறுங்கியது
Accident During Anti Iran Operation US KC 135 Aircraft Crashes in Iraq
ஈரானை குறிவைத்து அமெரிக்கா–இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் தற்போது 3-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அதிர்ச்சியூட்டும் வகையில் அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. போர்நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட இந்த சம்பவம் சர்வதேச ராணுவ வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஈராக்கு வான்வெளியில் அமெரிக்காவின் கே.சி-135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இதே நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மற்றொரு விமானம் அவசரமாக திசை மாற்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “ஆபரேஷன் எபிக் ப்யூரி” நடவடிக்கையின் போது நட்பு நாடுகளின் வான்வெளியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் இரண்டு விமானங்கள் ஈடுபட்டிருந்த நிலையில், ஒன்றே மேற்கு ஈராக்கில் விழுந்ததாகவும் மற்றொன்று பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த விபத்து எதிரி தாக்குதல் அல்லது நட்பு படைகளின் தவறான தாக்குதலால் ஏற்பட்டதல்ல எனவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. விமானத்தில் இருந்த வீரர்களின் எண்ணிக்கை, உயிரிழப்பு ஏற்பட்டதா, விபத்துக்கான துல்லிய காரணம் என்ன போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவத்துடன் சேர்த்து, ஈரானுக்கு எதிரான இந்த போர்நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதற்கு முன் குவைத் படைகள் தவறுதலாக அமெரிக்காவின் மூன்று எப்-15 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவமும் குறிப்பிடத்தக்கதாகும்.
English Summary
Accident During Anti Iran Operation US KC 135 Aircraft Crashes in Iraq