ஆர்சிபி வெற்றி பேரணியில் 11 பேர் உயிரிழப்பு சம்பவம்: சரமாரியான கேள்வி, ஐபிஎல் நிர்வாகத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!
Karnataka High Court issues barrage of questions on 11 deaths at RCB victory rally
நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கிய நிலையில், இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
18 வருடங்களுக்கு பின்னர் ஐ.பி .எல் கோப்பையை பெங்களூரு அணி வென்றுள்ளதால் பொது இடத்தில் முன்னதாக வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட பெங்களூரு அணி தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 05 மணியளவில் சின்னசாமி மைதானத்தில் வெற்றிப் பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பெங்களூரு அணி ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குவியத் தொடங்கினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கிய 11 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.
கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரவும் மீண்டும் ஒரு பெரும் அசம்பாவிதத்தை தவிர்க்கவும் பெங்களூரு அணி ரசிகர்கள் மீது கர்நாடக காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவ்வாறு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ள 11 பேர் தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

இதன் போது, “வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது கிரிக்கெட் சங்கமா..? அல்லது அரசா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன், விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானம் என ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்..? அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன..?என்று அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.
மேலும், இந்த கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்க வேண்டுமென அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன்,எதிர்வரும் 10-ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் பதிலளிக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Karnataka High Court issues barrage of questions on 11 deaths at RCB victory rally