குளிர்காய எக்காரணம் கொண்டும் இதனை செய்துவிடாதீர்கள்... சிறுமி பலி.. குடும்பத்தினர் உயிர் ஊசல்.!
Karnataka Chikkaballapur Family Try to Avoid Cold Make fire in House
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பள்ளாபூர் மாவட்டத்தின் பால்யா கிராமத்தை சார்ந்தவர் வீர ஆஞ்சநேயா. இவரது மனைவி சாந்தம்மா. இவர்கள் இருவருக்கும் அர்ச்சனா என்ற 15 வயது மகளும், அர்ஷிதா என்ற 13 வயது மகளும் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிக்பள்ளாபூர் பகுதியில் கனமழை பெய்த நிலையில், கடுமையான குளிர் நிலவியுள்ளது. இதனையடுத்து தம்பதிகள் குளிர்காய்வதற்காக வீட்டில் இருக்கும் படுக்கை அறையில், இரும்பு பீப்பாய் ஒன்றில் விறகு கட்டைகளை சேகரித்து தீ மூட்டியுள்ளனர்.
வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை அடைத்துவிட்டு, தீ ஒருபுறம் எரிய மகள்களுடன் உறங்கியுள்ளனர். அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக வீடு முழுவதும் கரும்புகை பரவவே, வீட்டில் இருந்த அனைவரும் உயிருக்கு போராடி துடித்துள்ளனர். இந்நிலையில், சிறிது நேரத்திற்கு உள்ளாகவே சிறுமி அர்ச்சனா பலியாகியுள்ளார்.
பின்னர் தட்டுத்தடுமாறி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்ததை அடுத்து, 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள கவுரிப்பித்தனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமி அர்ச்சனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக மஞ்செனஹள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், குளிர்காய வீட்டிற்குள் மூடப்பட்ட தீயில் இருந்து வெளியான கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடாக மாறியதால் அர்ச்சனா உயிரிழந்ததும், குடும்பத்தினர் உயிருக்கு போராடி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka Chikkaballapur Family Try to Avoid Cold Make fire in House