ஜார்கண்ட் உயர்கல்வி அமைச்சர் திடீர் மாரடைப்பால் மரணம்..!
Jharkhand Higher Education Minister dies of sudden heart attack
ஜார்கண்ட் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் சுதிவ்யா குமார் (56) திடீர் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் கிரிதி தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2019-ஆம் ஆண்டு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுதிவ்யா குமார். இவர் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் தீவிர விசுவாசியும் ஆவார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நில மோசடி வழக்கில் முதல்வர் கைது செய்யப்பட்டபோது, கட்சியில் ஏற்பட்ட கடும் நெருக்கடிகளைத் திறம்பட கையாண்டவர். தற்போது உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுலா, கலை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், சுதிவ்யா குமாருக்கு நேற்றிரவு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மறைந்த அமைச்சருக்கு ஒரு மகன் மற்றும் 02 மகள்கள் உள்ளனர். முன்னதாக, ஜார்கண்ட் மாநில சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய கர்நாடகாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அங்கு அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜை சந்தித்துப் பேசிவிட்டு அண்மையில்தான் ராஞ்சி திரும்பியிருந்தார்.
அமைச்சரின் திடீர் மறைவு குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''சுதிவ்யா குமாரின் மரணம் மாநில அரசுக்கும், கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரது மறைவால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மறைவுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Jharkhand Higher Education Minister dies of sudden heart attack