பணியாளர் பற்றாக்குறையால் இண்டிகோ தடுமாறல்! ஒரே நாளில் 100 விமான ரத்து...!
IndiGo suffers setback due staff shortage 100 flights cancelled single day
விமானப் பணியாளர்களின் பணிநேரத்தில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்ததையடுத்து, இண்டிகோ நிறுவனத்தில் பணியாளர் பற்றாக்குறை கடுமையாக வெடித்து, விமான சேவை முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அட்டவணைப்படி திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு போதுமான விமானிகள், கேபின் குழுவினர், தரை பணியாளர்கள் குறைவாக இருக்கும் நிலை தீவிரமடைந்ததால், பல விமானங்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்படுகின்றன.

கடந்த 5 நாட்களாக இந்த நெருக்கடி நீடித்து, இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.உள்நாட்டு சேவைகள் மட்டுமல்லாமல், பன்னாட்டு விமானங்களும் முடக்கத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன.
இதனால் முன்பதிவு செய்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயணத்தடை, நெருக்கடி, குழப்பம் ஆகியவற்றைச் சந்தித்து வருகிறார்கள். விமான நிலையங்களில், இண்டிகோ பணியாளர்களுடன் பயணிகள் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடைபெறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
இச்சம்பவம் நாடாளுமன்றத்திலும் எடுத்துக்கூறப்பட்டதை அடுத்து, மத்திய அரசு அவசர தலையீடு செய்துள்ளது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, பணியாளர் பணிநேர கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் அட்டவணைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும், மேலும் அடுத்த 3 நாட்களில் முழுமையாக நிலைபெறும் என மத்திய அரசு நம்புகிறது.
இந்த நெருக்கடியின் தாக்கம் சென்னையிலும் தொடர்கிறது. இன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், இருக்கும் பிற விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணங்களை 5 மடங்கு வரை உயர்த்தியதால், பயணிகள் அதிர்ச்சியடைந்து ஆத்திரம் வெளிப்படுத்தினர்.
English Summary
IndiGo suffers setback due staff shortage 100 flights cancelled single day