பெங்களூருவில் கொடூரம்; விடுதியில் மனைவியை கொலைச் செய்துவிட்டு மாயமான கணவன்; விசாரணையில் பகீர் தகவல்..!
Husband kills wife in Bengaluru lodge and vanishes
பெங்களூருவின் தொட்டபல்லாபுரா நகரில் உள்ள பிரபலமான 'சம்ருத்தி' ஹோட்டலுக்கு மேலே உள்ள தங்கும் விடுதி ஒன்றில், 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் உயிரிழந்த பெண் கௌரிபிதனூர் தாலுகாவில் உள்ள நாகரகெரே கிராமத்தைச் சேர்ந்த வித்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர், கணவர் ஆனந்துடன் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு அறை எடுத்து தங்கியுள்ள நிலையில், அன்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.விடுதியில் இருந்து கணவர் நள்ளிரவு 1 மணிக்கு மேல் அறையைப் பூட்டி விட்டு மாயமாகியுள்ளார். மறுநாள் அறை திறக்கவில்லை என ஆனந்திற்கு கால் செய்தபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அப்போதுதான் விடுதி ஊழியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு மாற்று சாவியைப் போட்டு அறையைத் திறந்துள்ளனர். அப்போது அறையில் வித்யா உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். வித்தியாவின் உடல் பிரேதப்பரிசோதனை ஆய்வில் ID card அணியப் பயன்படும் நாடாவைக் கொண்டு கழுத்து நெரித்து, அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து மனைவி, வித்யாவை அவரது கணவர் ஆனந்த் கொலை செய்துவிட்டுத் தப்பி சென்றுள்ளமை உறுதியாகியுள்ளது. வித்யாவும் ஆனந்தும் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தொட்டபல்லாபுராவின் காந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஆறு மாதங்களாக இத்தம்பதியினரிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, வித்யா தனது கணவரைப் பிரிந்து பெங்களூரில் உள்ள 'பேயிங் கெஸ்ட்' -ஆக தங்கும் விடுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் மாயமானதைத் தொடர்ந்து, ஆனந்த் தொட்டபல்லாபுரா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
பின்னர் போலீசார் வித்யாவைக் கண்டுபிடித்து, சுமார் 20 நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கு counseling வழங்கி அவர்களை மீண்டும் சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் கடந்த புதன்கிழமையன்று ஆனந்த் வித்யாவை அந்தத் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வித்யாவை கழுத்து நெரித்துக் கொன்று விட்டுத் தப்பித்துள்ளார். இந்நிலையில் தனிப்படை அமைத்து ஆனந்தை தேடி வரும் நிலையில் அவர் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான முழு பின்னணியும் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband kills wife in Bengaluru lodge and vanishes