அரசியல் செல்வாக்கில் ஆசிரியருக்கு இடமாற்ற உத்தரவு: ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம்..!
High Court quashes transfer order against teacher due to political influence
இமாச்சலப் பிரதேசத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த இடமாற்ற உத்தரவை இமாச்சல் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பக்ஸைத் கல்வி வட்டத்தில் உள்ள கெல்தி அரசு தொடக்கப் பள்ளியில் இளநிலை அடிப்படை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சித்தார் சிங் என்பவர், தரம்ஷூர்-I வட்டத்தில் உள்ள கராரி பப்லாக் பள்ளிக்கு 04-ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த இடமாற்றத்திற்கு எந்தவொரு நிர்வாகக் காரணமும் இல்லை. மே 16-ஆம் தேதியிட்ட குறிப்பின் (அரசு முறை கடிதம்) அடிப்படையில் மட்டும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஆசிரியர் சித்தார் சிங் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதே பள்ளியில் பணியாற்றி வருவதாகவும், தனக்குப் பதிலாக மாற்று ஆசிரியர் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோத்ஸ்னா ரேவல் துவா, அரசுத் தரப்பிடம் விளக்கம் கேட்டிருந்தார். அதன்படி, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், அந்த இடமாற்ற உத்தரவு மாவட்ட கல்வி அலுவலர் குறிப்பின் அடிப்படையில்தான் பிறப்பிக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டார்.

இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக எந்த ஆய்வும் செய்யாமல், ஒரு குறிப்பின் அடிப்படையில் மட்டுமே இடமாற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது நிர்வாக கொள்கைகளுக்கு எதிரானது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, இந்த இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பளித்துள்ளார். அத்துடன், நடைமுறையில் உள்ள இடமாற்றக் கொள்கையின்படி, சட்டத்திற்குட்பட்டு மீண்டும் அவரை இடமாற்றம் செய்ய அரசுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
English Summary
High Court quashes transfer order against teacher due to political influence