உத்தரப் பிரதேசத்தில் பயங்கரம்: காரின் அடியில் சடலமாக 4 வயது சிறுமி... பாலியல் பலாத்காரம் செய்து கொலை - தாய்மாமா கைது!
Harrowing Incident in UP 4-Year-Old Murdered Uncle Charged Under POCSO as Special Teams Hunt for the Accused
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ரத்த உறவே எமனாக மாறிய ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெறும் 4 வயதேயான சிறுமி ஒருவரை, அவரது சொந்தத் தாய்மாமாவே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத்தின் டீலா மோட் (Teela Mod) பகுதியில் வசிக்கும் தினக்கூலித் தொழிலாளர்களின் மகளான அந்தச் சிறுமி, கடந்த சனிக்கிழமை மதியம் முதல் மாயமான நிலையில், அன்றிரவு ஒரு காரின் அடியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சம்பவத்தன்று, சிறுமியின் தந்தை மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பார்வையற்றவரான அவரிடம், "குழந்தைக்குத் தின்பண்டங்கள் வாங்கித் தருகிறேன்" என்று ஆசை வார்த்தை கூறி அந்த நபர் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். வேலைக்குச் சென்றிருந்த தாய் வீடு திரும்பியபோது குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் அந்த நபர் குழந்தையை அழைத்துச் சென்றதை உறுதி செய்துள்ளனர். பல மணி நேரத் தேடலுக்குப் பிறகு, நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்கு அடியில் சிறுமி ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கிடந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், முசாபர்நகரைச் சேர்ந்த அந்த நபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகச் சமீபத்தில் இங்கு வந்து தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் கொலை மற்றும் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த நபரைக் கைது செய்ய காசியாபாத் காவல்துறை ஐந்து தனிப்படைகளை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
English Summary
Harrowing Incident in UP 4-Year-Old Murdered Uncle Charged Under POCSO as Special Teams Hunt for the Accused