பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் உதவியாளரான அரச ஊழியர் கைது..!
Former Congress minister aide arrested for spying for Pakistan
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரின் முன்னாள் உதவியாளர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, இந்திய ராணுவ ரகசியங்கள் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிப்பவர்களை கண்டறிந்து போலீசார் கைது செய்து வருகின்றனர்.
முன்னதாக, யுடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது ராஜஸ்தானின் காங்கிரஸ் மாஜி அமைச்சர் ஷாலே முகமதுவின் முன்னாள் உதவியாளர் ஷாகுர் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அத்துடன், இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்மீது உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில், சில பாகிஸ்தானியர்களுடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அத்துடன், இவர் இஸ்லாமாபாத்துக்கு 06 - 07 முறை சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, மத்திய விசாரணை அமைப்புகள், தொடர்ந்து ஷாகுர் கானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் காங்ரா பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் அபிஷேக் பரத்வாஜ் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Former Congress minister aide arrested for spying for Pakistan