பீஹார் வாக்காளர் திருத்த பட்டியல் வழக்கு: நீக்கப்பட்ட வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலம் நீட்டிப்பு..!
Extension of time for requests and objections of voters removed from Bihar electoral roll
பீஹார் மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்கள், இறந்து போனவர்கள் மற்றும் இரண்டு இடத்தில் பெயர் உள்ளவர்கள் என 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையகம் நீக்கியுள்ளது. புதிய வரைவு வாக்காளர் பட்டியலை ஆகஸ்ட் 1ந் தேதி வெளியிட்டது.
போலியான வாக்காளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ், ஆர்.ஜே.டி., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பீஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பான நீக்கப்பட்ட வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை (செப்டம்பர் 01-க்குள்) ஏற்றுக்கொள்வோம் என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஆனாலும், இந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரி, ஆர்ஜேடி, ஏஐஎம்ஐஏம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 03 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
இதன் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகள் பற்றி விவாதிக்கப்பட வேண்டி உள்ளது என்று தெரிவித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான கோரிக்கைகள், ஆட்சேபனைகளுக்கான காலக்கெடு பற்றி மட்டுமே இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் கமிஷன் தரப்பில், பெயர் சேர்க்கும் படியான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் செப்டம்பர் 30-க்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டாலும் கூட பரிசீலிக்கப்படும் என்றும், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி வரை இவை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 08-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
English Summary
Extension of time for requests and objections of voters removed from Bihar electoral roll