முடிவுக்கு வராத ஆழ்துளை கிணறு மரணங்கள்....! மண்ணுக்குள் புதைந்த பிஞ்சு உயிர்...! - நடந்தது என்ன...?
endless borewell deaths baby life buried soil What happened
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் தேவாசியின் குடும்பம், மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி அருகிலுள்ள ஜலாரியா கிராமத்தில் ஆடு மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்த அவரது 2½ வயது மகன் பகீரத், எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து துயர சம்பவம் அரங்கேறியது.

இந்த தகவல் கிடைத்ததும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
குழந்தை சிக்கியிருந்த கிணற்றுக்கு இணையாக மற்றொரு பள்ளம் தோண்டும் பணி அவசரகதியில் தொடங்கப்பட்டது. சுமார் 65 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இரவு முழுவதும் இடையறாத போராட்டமாக மீட்பு பணி நீடித்தது. சுமார் 40 அடி ஆழம் வரை தோண்டியபோது கடினமான பாறைகள் தடையாக உருவானதால், இயந்திரங்கள் செயல்பட சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, போபால் மற்றும் இந்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட நவீன கருவிகள் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்தன.கேமரா உதவியுடன் குழந்தையின் நிலை கண்காணிக்கப்பட்டு, தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.
இவ்வாறு சுமார் 23 மணி நேரம் நீடித்த பரபரப்பான மீட்பு முயற்சிக்குப் பிறகு, நேற்று மாலை பகீரத் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டான்.
அதனைத் தொடர்ந்து அவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துயர சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
endless borewell deaths baby life buried soil What happened