7 பேர் விடுதலை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு!?
central govt decided to file a review petition against Rajiv Gandhi case
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாமா என மத்திய பாஜக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காததால் கடந்த மே மாதம் 18ஆம் தேதி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, முருகன், சாத்தன் உள்ளிட்ட ஆறு பேர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து கடந்த 11ம் தேதி உச்சநீதிமன்றம் 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பல வரவேற்பு தெரிவித்தாலும் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளருமான ஜெயராம் ரமேஷ் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேரை விடுதலை செய்தது துரதிஷ்டவசமானது. இதனை கண்டிப்பாக ஏற்க முடியாது என தனது அதிருப்தி வெளிபடுத்தி இருந்தார். இதனால் ஆறு பேர் விடுதலையானது தேசிய பிரச்சனையாக மாறி உள்ளது. பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலையை தடுக்க மத்திய அரசு உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி 7 பேரின் விடுதலை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி "ஏழு பேரின் விடுதலை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையெனில் காங்கிரஸ் தாக்கல் செய்யும்" என எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதன் காரணமாக மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
central govt decided to file a review petition against Rajiv Gandhi case