தலிபான் அமைச்சரின் ஊடக சந்திப்பு: பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுத்ததால் வெடித்த சர்ச்சை: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம்..!
Central government clarifies opposition parties questions on denial of access to female reporters at Taliban ministers media conference
டில்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு பெண்களுக்கு முழு உடலை மறைக்கும் அளவுக்கு ஆடை அணிய வேண்டும், வீட்டை விட்டு வெளியே சென்று பணியாற்றக் கூடாது போன்ற நிறைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன், சமீபத்தில் பெண்கள் எழுதிய சில புத்தகங்களுக்கு, தலிபான் அரசு தடை விதித்தது.
தலிபான் அமைச்சரின் செய்தியாளர் கூட்டத்தில் பெண் நிருபர்கள் மறுக்கப்பட்டமைக்கு, 'பெண்களை போற்றும் இந்தியா போன்ற நாட்டில், இப்படி பாலின பாகுபாட்டுடன் ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கூறியதாவது:
'ஒரு பொது நிகழ்ச்சியில் பெண் நிருபர்கள் பங்கேற்பதற்கு அனுமதி மறுத்ததன் மூலம், அவர்களுக்கான உரிமையை பெற்று தருவதில், மத்திய அரசு பலவீனமடைந்து விட்டதாக தெரிகிறது. சமமான உரிமை நம் நாட்டில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சமமான உரிமை இருக்கிறது.
பாலின பாகுபாடு தொடர்பான இந்த விவகாரத்தில், பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? அப்படியெனில், 'பெண் சக்தி' என அவர் முழக்கமிடுவது, வெற்று குரலா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என, பிரியங்கா காந்தியும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஊடக சந்திப்பில் பெண்களை மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மும்பையில் உள்ள ஆப்கானிஸ்தான் துாதரகம் தான் அந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கான அழைப்பிதழை வெளியிட்டது. அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிருபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தது.
அந்த அழைப்பிதழ் பெற்றவர்கள் தான் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆப்கன் துாதரகம் அமைந்திருக்கும் பகுதி, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை.' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Central government clarifies opposition parties questions on denial of access to female reporters at Taliban ministers media conference