சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு!
central government allocated Rs 1400 crore as a special fund
புதுச்சேரியின் சட்டசபை பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட 19 பாரம்பரிய கட்டிடங்களில் புதுச்சேரி சட்டசபையும் ஒன்று. புதுச்சேரி சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் வெவ்வேறு இடங்களில் இயங்குவதால் நிர்வாக ரீதியிலான சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதல்வராக இருந்த போது தட்டாஞ்சாவடியில் தலைமைச் செயலகம் கட்ட திட்டமிட்டார். ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக கைவிடப்பட்டது.
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ரங்கசாமி தனது கனவு திட்டமான தட்டாஞ்சாவடி புதிய சட்டசபை கட்டிடம் கட்டும் திட்டத்தை கையில் எடுத்தார். ஆனால் அப்பொழுது நிலவை வந்த நிதி பற்றாக்குறையின் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. ரங்கசாமியின் கனவு திட்டமான புதிய சட்டசபை வளாகத் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு ரூ.320 கோடி செலவின கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புதிய சட்டசபை கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.1700 கோடி ரூபாய் சிறப்பு நீதி வழங்க வேண்டும் என சபாநாயகர் செல்வம் மனு அளித்திருந்தார். இதனை அடுத்து மத்திய உள்துறை சார்பு செயலாளர் அனிதா ஷைனி புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் கூடுதல் விவரங்களை அனுப்புமாறு அறிவுறுத்தி கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இதனை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிப்பதற்காக இரண்டு கட்டுமான நிறுவனங்களை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க அமைத்தது புதுச்சேரி அரசு.
கடந்த புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக முதல்வர் ரங்கசாமி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பட்ஜெட்டிற்கு தேவையான நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் காண நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தி இருந்தார். தற்பொழுது மத்திய அரசு புதுச்சேரிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு சிறப்பு நிதியாக 1400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியதாவது "புதிய சட்டசபை, விமான நிலைய விரிவாக்கம், துறைமுகம் மேம்பாடு மற்றும் சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ஒதுக்கியுள்ளது. சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக ரூ.225 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு சிறப்பு நிதி வழங்கிய மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
English Summary
central government allocated Rs 1400 crore as a special fund