ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு; சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகம் அறிவிப்பு..!
CBSE school administration announce public exams for class 10 twice a year
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., தேர்வுக் கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் கூறியுள்ளதாவது: 2026-ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை சி.பி.எஸ்.இ., அங்கீகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறவுள்ளது. மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும் என்றும், முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் முதல் தேர்வில் கலந்து கொள்வது கட்டாயம் என்றும், இரண்டாம் தேர்வில் விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும் என்றும் சன்யாம் பரத்வாஜ் குறிப்பிட்டுளாளார்.
குறிப்பாக, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும், உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் சி.பி.எஸ்.இ., தேர்வுக் கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
CBSE school administration announce public exams for class 10 twice a year