டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு; கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேர் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு..!
CBI appeals in Delhi High Court against acquittal of 23 including Kejriwal
டெல்லியின் முன்னாள் முதல்வர், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேர், டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் படி, இவர்கள் வழக்கிலிருந்து விடுப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் உடனடியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்றும் கூறி கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்துள்ளார்.

அத்துடன், விசாரணையில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், வெறும் யூகங்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் சிபிஐ-யை நீதிமன்றம் சாடியுள்ளது. இது தொடர்பாக விசாரணை அதிகாரிக்கு எதிராகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால், சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு "சட்டரீதியாக தவறானது" என்றும், விசாரணையின் பல முக்கிய அம்சங்கள் நீதிமன்றத்தால் கவனிக்கப்படவில்லை என்றும் கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
CBI appeals in Delhi High Court against acquittal of 23 including Kejriwal