ஒரு மணிநேரம் 15 நிமிடங்களில் சென்னையிலிருந்து பெங்களூரு செல்ல புல்லட் ரயில் திட்டம்; ரயில்வே அமைச்சர் அறிவிப்பு..!
Bullet Train Project to Travel from Chennai to Bengaluru in One Hour and 15 Minutes
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிக பெரிய ஏஐ டேட்டா மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், பேசும் போது குறிப்பிட்டுள்ளதாவது; தென்னிந்தியாவில் வரவுள்ள அதி வேக புல்லட் ரயில் திட்டங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதோடு, இந்த திட்டம் பயண நேரத்தை கணிசமாக குறைப்பதுடன், முக்கிய நகரங்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலத்தையும் உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள அதிவேக ரயில்வே நெட்வொர்க் ஆந்திராவில் அமைய உள்ள தலைநகரான அமராவதி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, புனே மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைத்து, போக்குவரத்து இணைப்பில் மிக பெரிய அளவிலான மேம்பாடுகளை கொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அது, அமராவதிக்கும் - ஹைதராபாத்திற்கும் இடையிலான பயண நேரம் 70 நிமிடங்களாக குறையும் என்றும், அதே நேரம் அமராவதிக்கும் சென்னைக்கும் இடையிலான பயணத்திற்கு 112 நிமிடங்கள் ஆகுமென குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஹைதராபாத்திலிருந்து புனே வரையிலான பயணத்திற்கு வெறும் 1 மணி நேரம் 55 நிமிடங்களும், புனேவிலிருந்து மும்பைக்கு 48 நிமிடங்களும், சென்னையிலிருந்து பெங்களூருக்கு செல்ல வெறும் 73 நிமிடங்களும், ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு சுமார் இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்களும் ஆகும் என்று கூறியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து சென்னை வரையிலான தற்போதுள்ள இரட்டை ரயில் பாதைகள் நான்கு பாதைகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விரிவாக்கத்தின் மூலம், சரக்கு மற்றும் பயணிகள் சேவைகள் உட்பட சுமார் 500 புதிய ரயில்களை இயக்க முடியும். தொடர்ந்து பேசிய அமைச்சர் புல்லட் ரயில் என்பது நம் அனைவருக்கும் ஒரு கனவுத் திட்டமாகும். அத்துடன், அகமதாபாத் முதல் மும்பை வரையிலான புல்லட் ரயில் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த வீடியோக்களை நீங்கள் பார்த்திருந்தால் அந்த 500 கிலோமீட்டர் தொலைவு வெறும் 01 மணி நேரம் 57 நிமிடங்களில் கடக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், மும்பை, சூரத், வாபி, பரோடா மற்றும் அகமதாபாத் ஆகிய அனைத்துப் பெருநகரங்களும் இணைந்து ஒரே பொருளாதார மண்டலமாக, ஒரே பொருளாதாரப் பிராந்தியமாக உருவெடுக்கும் என்றும், அதே போன்றதொரு அதிசயம் இப்பொழுது ஆந்திராவிலும் நிகழவிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, அமராவதியிலிருந்து ஹைதராபாத் வரையிலான பயணம் வெறும் 70 நிமிடங்களில் சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளதோடு, இது துறைமுகங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் கலாச்சார மையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார். அத்துடன், ஆந்திர மாநிலத்தில் செய்யப்பட்டு வரும் ரயில்வே மேம்பாடு குறித்து பேசுகையில், கடந்த பல ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் ஒருங்கிணைந்த ரயில்வே நிதி ஒதுக்கீடு ரூ.886 கோடியாக இருந்த நிலையில், தற்போது ஆந்திர பிரதேசம் மட்டும் ரூ.10,134 கோடியை பெறுகிறதாக குறிப்பிட்டார்.
English Summary
Bullet Train Project to Travel from Chennai to Bengaluru in One Hour and 15 Minutes