போட்டோஷூட் சென்ற மணமக்கள்… திரும்பியது இரு உடல்கள்...! -காதல் கனவை கிழித்த கொடூர விபத்து...!
bride and groom went photoshoot and returned two bodies tragic accident that shattered their love dream
கர்நாடகக் கொப்பல் மாவட்டம் கனுமனகட்டே கிராமத்தைச் சேர்ந்த கரியப்பா மடிவாளா (26) மற்றும் காரடகி தாலுகா முஸ்டூரு கிராமத்தைச் சேர்ந்த கவிதா (19) , இருவரின் குடும்பங்களும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் பேசி முடிவு செய்திருந்தனர். வரும் 20-ஆம் தேதி கொப்பல் டவுனில் நடைபெறும் கூட்டு திருமண விழாவில், கரியப்பா–கவிதா ஜோடியும், கரியப்பாவின் அண்ணன் ரமேஸ் உள்ளிட்டோரின் திருமணமும் நடைபெற இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.
இந்த திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், திருமண முன் நினைவுகளை பதிக்க, கரியப்பா–கவிதா இருவரும் ‘போட்டோஷூட்’ செய்ய தீர்மானித்தனர். கூட்டு திருமணம் என்பதால், தனியாக படப்பிடிப்பு செய்வதற்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி, பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே, உம்னாபாத் உள்ளிட்ட அழகிய இடங்களை மோட்டார் சைக்கிளில், விதவிதமான போஸ்களுடன் இருவரும் மகிழ்ச்சியாக போட்டோ எடுத்தனர்.
மணவிழா உற்சாகத்தில் திளைத்திருந்த அந்த ஜோடியின் மகிழ்ச்சி, சில மணி நேரங்களிலேயே சோகமாக மாறியது.மேலும், போட்டோஷூட்டை முடித்த பிறகு, கவிதாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கரியப்பா தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்.
இரவு நேரத்தில் கங்காவதி அருகே சிக்கபெனகல் கிராமம் சென்றபோது, சாலையோரத்தில் பழுது பார்த்து நிறுத்தப்பட்டிருந்த லாரியை கடப்பதற்காக கரியப்பா நடுவே ஓட்டிக் கொண்டிருந்தார். அவ்வேளையில், எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி நேருக்கு நேர் மோதியது.அந்த பயங்கர மோதலில் இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டனர்.
தலையில் தீவிர காயம் ஏற்பட்ட கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கரியப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே மரணம் அடைந்தார்.இருவரின் திடீர் மரணம், இரண்டு குடும்பங்களின் திருமண மகிழ்ச்சியை கண நேரத்தில் சோக அலைகளாக மாற்றியது.
மணமக்களின் உயிரற்ற உடலைக் கண்ட பெற்றோரும் உறவினரும் கதறி துடித்தனர். அந்த காட்சி கல்லென்ற இதயத்தையும் குலைக்கும் வகையில் இருந்தது.இந்த தகவல் அறிந்த கங்காவதி புறநகர் போலீசார் விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் லாரி ஓட்டுநரை தேடிப்பிடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திருமணத்திற்கு முன் எடுத்த ‘போட்டோஷூட்’ புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது அந்தச் சோகத்தை இன்னும் இருமடங்காக்கியுள்ளது. இளமை கனவுகளுடன் மணவாழ்க்கையைத் தொடங்கத் தயாரான இவர்கள் விபத்தில் பலியானது அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bride and groom went photoshoot and returned two bodies tragic accident that shattered their love dream