தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் பாதிப்பு: பெங்களூரு சிறுமி உயிரிழப்பு: நான்கு மாதங்களாக உயிருக்கு போராடிய கொடுமை..!
Bengaluru girl dies after battling for life for four months after contracting rabies after being bitten by a stray dog
கர்நாடகா மாநிலத்தில் தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த நான்கு மாதங்களாக உயிருக்குப் போராடிய நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சாஸ்திரி லேஅவுட்டைச் சேர்ந்த கதீரா பானு என்ற 04 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 27 அன்று தனது வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த தெரு நாய் ஒன்று சிறுமியின் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் பலமாக கடித்துள்ளது. தொடக்கத்தில் அவருக்கு தாவனகேரில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கதீரா, சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் சிறுமிக்கு கடுமையான மூளைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மருத்துவ பரிசோதனைகளின் முடிவில் சிறுமிக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தும் ‘டம்ப் ரேபிஸ்’ நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உயிரிழந்துள்ளார்.
கர்நாடகாவில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், 2.8 லட்சம் நாய்க்கடி பாதிப்புகளும், 26 சந்தேகத்துக்கிடமான ரேபிஸ் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் ரேபிஸ் உயிரிழப்புகள் அதிகரித்ததை அடுத்து, டெல்லி - என்சிஆரில் எட்டு வாரங்களுக்குள் பொது இடங்களில் இருந்து அனைத்து தெரு நாய்களையும் அகற்றி, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என ஆகஸ்ட் 11 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Bengaluru girl dies after battling for life for four months after contracting rabies after being bitten by a stray dog