இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க சீனா செல்லும் அஜித் தோவல்..!
Ajit Doval to visit China to discuss border issue between India and China
இந்தியா - சீனா இடையிலான 3,488 கி.மீ. நீளமுள்ள எல்லைப் பிரச்சனை குறித்து விவாதிக்க சிறப்புப் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை (திங்கள்கிழமை) சீனா செல்கிறார். அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்திக்கவுள்ளார்.
அதன்படி, அஜித் தோவல் மற்றும் வாங் யி ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று 25-வது சுற்று சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - சீனா இடையிலான சிக்கலான எல்லைப் பிரச்சனையை முழுமையாகத் தீர்ப்பதற்காக 2003-இல் உருவாக்கப்பட்ட பேச்சுவார்த்தை அமைப்பின் கீழ், இரு தரப்பிலும் நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரதிநிதிகளாக அஜித் தோவல் மற்றும் வாங் யி ஆகியோர் செயல்படுகின்றனர்.
இந்த அமைப்பு எல்லைப் பிரச்சனைக்கு இதுவரை முழுமையான தீர்வை காணவில்லை என்றாலும், பதற்றத்தைக் குறைப்பதற்கும் தகவல் தொடர்பைத் தக்கவைப்பதற்கும் இது ஒரு முக்கியமான வழியாக இரு தரப்பு அதிகாரிகளாலும் கருதப்படுகிறது.
வரும், செப்டம்பர் 12-13 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றமை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஜி ஜின்பிங்கின் இந்திய வருகை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இந்த உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்பார் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த உச்சி பிரிக்ஸ் மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான வாய்ப்பை இது உருவாக்கக்கூடும்.
பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டின் போது சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Ajit Doval to visit China to discuss border issue between India and China